இந்தியா வரும் 2022-ஆம் ஆண்டில், மத்திய அரசின் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 60 கிகாவாட் காற்றலை மின் உற்பத்தியில், 54.7 கிகாவாட் உற்பத்தி திறன் மட்டுமே பெற முடியும் என்று ஃபிட்ச் சொல்யூஷன்ஸ் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வரும் 2022-ஆம் ஆண்டில், 175 கிகாவாட் வரை மின் உற்பத்தி திறனை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் சூரியசக்தி மூலம் 100 கிகாவாட், காற்றாலை மூலம் 60 கிகாவாட் மற்றும் உயிரி ஆற்றல் மூலம் 10 கிகாவாட், நீர் ஆற்றல் மூலம் 5 கிகாவாட் மின் உற்பத்தியை இலக்காக கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் மின் உற்பத்திக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. மின் உற்பத்தி திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல், அதற்கான முதலீடு மற்றும் செயல்திறன்மிக்க விநியோகம் என அனைத்தும் சவாலானது. ஆனால், இந்த சவால்களையும் கடந்து இந்தியா 2019-ல் இருந்து 2022-ஆம் ஆண்டு வரை, ஆண்டுக்கு சராசரியாக 4.5 கிகாவாட் காற்றலை மின் உற்பத்தி திறனை உயர்த்த முடியும். எனவே, வரும் 2022-ல் மத்திய அரசின் காற்றாலை மின் உற்பத்தி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 60 கிகாவாட் மின் உற்பத்தியில், 54.7 கிகாவாட் திறன் மட்டுமே பெற முடியும் என்று ஃபிட்ச் சொல்யூஷன்ஸ் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.